மூடிவைக்கவில்லை என் எழுதுகோலை...
00
நனைந்த நேரம் நினைந்து
வனைந்த அழகுக் காட்சியாக
நினைந்து நினைந்து குளிர்தலே
இன் தமிழ் திமிர் மையலே!
00
என்னிதயவெளி நாயகா நீயோ!
மின்னலாய் நுழையும் மின்சாரமே!
கன்னல் கவிதை மண்டலமே!
இன்னல் அகற்றும் இனிமைத் தென்றலே!
00
தேடிப்பிடித்துத் தமிழ் அட்சரங்களை
ஓடிப் போகவிடாது ஒன்றாக்கி
பாடிக் களிக்க கவிபுனைய
மூடிவைக்கவில்லை என் எழுதுகோலை
00
கவினுறு கவிதையாய்க் கங்குகரையின்றி
கங்கையாய்ப் பாய கனியவேண்டும் தமிழ்
பனுவல் ஆயிரம் பிறந்து பகிரங்கமாய்
பகுத்தறிவு பெருக பகவானே அருள்வாய் !
00
பகையாளியும் விரும்பும் பண்டிதம் பிறக்கட்டும்
பரிபூரண நிறைவு பனுவலாய் அமையட்டும்
தேனூறும் வரிகளில் தேர்ச்சி;; கொண்ட
தேட்டம் இதுவென திருப்தி நிறையட்டும்!
00
இலக்கணக் கவிதை இலக்கு நோக்கி
இலகுவாய்ப் பிறந்தது இதிலென்ன ஆச்சரியம்!
நேசமுடன் ஏந்தும் நேர்மையான பிரசவம்
பாசமுடன் பிறக்கும் மொழி மழலை.
00
கவியூற்று – வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் -21-11-2025


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக