வேதாவின் வலை -1 ல் பெண்மை தலைப்பில்
இது 20 வது கவிதையாக பதியப்பட்டுள்ளது.
வான்பதிக்காக மறுபடி இங்கு பிரசுரித்துள்ளேன்.
அலங்காரப் பதுமையோ அறிவுச் சுடரோ!
உளம் திறந்து பழகாமல்
உணர்வுகள் உள்ளே உறைந்திட
உதட்டை இறுக மூடுபவளே!
உதட்டுச் சாயமிட்டு மறைப்பவளே!
உனது திறமை வீணே
உறைபனி யாகிறது தானே!
உறைந்து போவதில் என்ன
உல்லாசம் உனக்குப் பெண்ணெ!
முழுதாய் நாலு வார்த்தை பெற
மூடிய உதட்டைத் திற!
ஆர்வம் நிறை விழிகளால்
அகலத் திறந்து பார்!
சேலைக் கேற்ற மாலை
மாலைக் கேற்ற காதணி
வேளைக் கேற்ற தலையலங்காரம்
விலையோ அளவற்றவுன் திறமைக்கு!
அலங்காரப் பதுமை யல்ல
அறிவுச்சுடர் நீ! – பிறர்
அகவிதழ் திறக்கச் செய்!
அறிவெனும் அகல் விளக்கையேற்று!
சிறுமைப் படுத்திச் சீண்டுவோரை
சிந்திக்கச் செய் பெண்ணே!
சிந்தனையை ஓட விட்டு
சிலிர்த்து எழு பெண்ணே!
பா வானதி வேதா. இலங்காதிலகம். டென்மார்க் - 2-12-2001.
தமிழ்சேவை ஓல்போ ஆண்டு ஒன்று- வான்பதி –
இதழில் பிரசுரமானது..



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக