(என் மன முத்துகள் - 16)
சிந்தனை
நல்ல சிந்தனை என்பது ஒரு கவர்ச்சிக் காந்தம் போன்றது.
வெல்லும் மனிதனாக மனிதனை இது ஆக்கும். உலகில் ஒருவனை
நல்ல மாமனிதனாகவும், முட்டாளாகவும் ஆக்குவதும் இந்தக் காந்தமே. எண்ணங்களில் கட்டுப்பாடுகளே எம்மை மேம்படுத்தும்.
ஒரு நிமிடக் கெட்ட எண்ணம் கட்டுப்பாடின்றி உருளுவதால் பல நல்லவை இழக்கப் படுகிறது.
குரோதத்தில் மனிதன் மதியை இழக்கிறான். உறவுகள் பிறரால் முறிக்கப் படுவதிலும் மனமெனும் இந்தப் பெரிய எதிரியே உறவுகளை முறிக்கிறது எனலாம்.
என்னை விடப் பெரியவன் யார்! நானே பெரியவன் எனும் எண்ணமே மனிதனைத் தாக்கி, தூக்கிப் பந்தாடுகிறது. பணிந்து போய் உறவுகளைப் பலப்படுத்தும் எண்ணத்தைத் தூக்கிப் புசிக்கிறது.
கொதித்துக் கொப்பளிக்கும் உறவுகளுடன் தொடர்பு கொள்ளல் அதே நிலையை தனக்குள்ளும் ஏற்றும் சக்தியுடையது. அதனாலேயே பலர் விலகி நடக்கிறார்கள். அதைப் புரியாது மேலும் மேலும் கொதிப்படைந்தே பலர் எரிமலையாகிறார்கள்.
நல்ல நட்பு அமைதி, ஆக்கம், இன்பம் தரும்.
அனைவரும் அறிந்த உண்மையிது. சுய வாழ்வின் கொந்தளிப்பே பல வெறுப்பு நுரைகளைப் பிறர் மீது கொட்டி அழுக்காக்குகிறது என்றும் கூறலாமோ! அன்றி இது தவறோ!
பிரியம், நேசம், அன்பு யாரும் அழைத்து வருவதல்ல. அது தானாக மலரும் அற்புத உணர்வு. விருப்பத்துடன் உறவு கொள்ள எந்தத் தடையும் பெரிதல்ல. அணையை உடைக்கும் நீர் போன்றது.
வாழ்வே இன்று நடிப்பாகும் போது காதல், கடமை, கல்யாணம், கண்ணியம் எங்கு போகுமோ!
வேதா. இலங்காதிலகம் டென்மார்க். 19-4-2017
(இந்தச் சிறு தொகுப்பிற்குப் பொருத்தமான ஒரு முன்னைய பதிவின் இணைப்பு 1-4-2011ல் பாருங்கள் (first web)