என் மகள் எனக்குத் தாயானாள்
கருவறைச் சித்திரமெம் இரண்டாம் மாணிக்கம்
மனவறையிலெம்மை நித்தம் ஏந்தும் தாயானாள்.
இனம் புரிந்து துன்ப ஈரம் துவட்டி
கனம் முழுதும் காற்றில் எறிவாள்.
அவ்வளவு தன்னம்பிக்கை, அளவற்ற துணிவு
எவ்வளவும் சுயமாகத் தூணாகத் தாங்குதல்
அனுபவக் கோர்வைகளால் நிலைத்த உள்ளம்
தெளிந்து நெளிந்தோடும் நதியான தாயவள்.
மருத்துவ நிலைய வரவேற்பாளர், உயர்வால்
சிகிச்சைப் பகுதிப் பொறுப்பாளர், படிப்பால்
பெண்கள், பெரியவர்கள், குழந்தைகளுடன் செய்யும்
மனவியல் ஆலோசனைச் சிகிச்சையாளர் பணி..
பிரிவு ரேகை பதித்துக் கடல்கடந்தாள்.
பரிவுடை தொலைபேசித் தாய்மைத் தத்துவம்
நித்தியம் பேசும் மனுநீதித் தாய்மையுடைய
மகத்துவமான எம் மாபெரும் சொத்தவள்.
பதினெட்டு வயதிலேயே மாற்றான் பிள்ளையைத்
தத்தெடுத்துப் படிப்பு பராமரிப்பை ஏந்தி
மானசீகத் தாயானவள், எமக்குப் பேரன்பீய
ஏது தடை! இயல்பு இறைவன் கொடையே!
முதுகு நீவி, கால்கள் பிடித்து
முறையான பயிற்சியைச் செய்து காட்டி
கணனியிலும் வாசித்து விளக்கம் தந்து
கருத்தாகக் கவனிக்கும் பாதுகாப்புத் தாயவள்.
உயிரணுக்கள் இணைந்து அணைக்கும் மென்மையாம்
உயிர்ப்புடைய அவளன்புப் போர்வை எம்
வயோதிப மனதிற்கு இதமுடை கதகதப்பு.
குளிர் சந்தனம் பூசிய உணர்வு.
ஊன்றுகோலானவள் வெற்றிக் கனி பறிக்கும்
எம்பும் மனத்தாள்! அழகால் அறிவால்
எம்மைக் கட்டியன்பு மலராலெம் கண்ணொற்றுபவள்.
ஆணிப்பொன் என் மகளெனக்குத் தாயானவள்!
17-8-2016.