எழுத்தெனும் பூக்காடு
அலைகடல் மனதில் அச்சங்கள்
தலைவிரித்து ஆடினால் எப்படி
நிலைக்கும் சிகரப் படிகள்!
வாழ்க்கைச் சதுரங்கத்தில் பக்குவமாய்
ஆழ்ந்திடில் சுலபமாய் வெற்றியடையலாம்
கற்றுத் தேறும் அறிவு
பற்றி ஊறி உரமாகும்
வெற்றி உறுதியாய்க் கரமிணைக்கும்
00
ஆற்றல் நிறைந்த மனிதன்
ஏற்ற வழியைச் சீரமைத்தால்
ஒருமைப்பாடான உலகக் கோளமாகும்
பெருமைத் தமிழ்க் கவிதைகள்
கவிதைக் கானகம் அமைக்கும்.
யார் கூறுவார் கானகக் கதையை!
வேரா நிழலா எது கூறும்!
தமிழின் மரபு இரும்புக்கோட்டை.
00
திரண்டு களித்த தமிழ்
புரண்ட சுடரினின்றும் உருகுவது
வரண்டிடாத உயிரூட்டும் கனிவொளி
மிரண்டிடாத தொல்பழ அமுதம்
மண்மிசை மானிட மாண்புகள்
தலைக் கனமின்றிப் பெருகட்டும்!
விரிக்கும் சுடரில் கிறங்குதலாய்
விசும்பை விஞ்சட்டும் வித்துவத்துவம்
00
வேதா. இலங்காதிலகம்-தென்மார்க்-7-2-2023
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக