திங்கள், 2 மார்ச், 2020

261. (824 ) கண்மூடும் வேளையிலே










கண்மூடும் வேளையிலே


செண்பக மலர் வாசனையில் பண்ணோசை இனிமையிலே
உண்மையிலோர் இன்பசுகம் கண்மூடும் வேளையிலே
திண்மையான பற்றுக்கோடில் மின்னுகின்ற நம்பிக்கை
கண்மூடும் வேளையிலும் எண்ணிடும் நிம்மதியை

கன்னித்தமிழ்ச் சொற்கோலம் வண்ணமாக்கும் சக்தி
கண்மூடித் தூங்கினால் புத்துணர்வு பலமாகும்.
கண்மூடிக் காதலால் திண்மைத் தோள் சாய்தலும்
உன்னத கவிதையாய் உள்ளத்திற்கொளி தரும்.

கண்ணனினருகும் கன்னித் தமிழ் கடைதலும்
நண்ணுதல் இரவிலே அதிசயம் அல்ல
மயில்தோகை விரிக்கும் துயிலிமைச்சிறகு தட்டும்
குயிலோசையும  வீண் துயில் தழுவும் வேளையிலே.

கண்மூடித் துயிலுகையில் விண்ணேகிய அம்மா
வெண்ணிலவாய் வருவார் என் கனவிலே
கண்மூடும் வெளையில் நிம்மதித் தூக்கம்
பண்ணிய உழைப்பிற்கு அவசிய ஓய்வாம்.

3-4-2005
(இலண்டன் தமிழ் வானொலி வியாழன் கவிதை
10-5-2006 ரிஆர்ரி தமிழ் அலைக்கு அனுப்பியது.)





1 கருத்து:

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு