நீதியை மதிக்கும் பாதை ...
சேரும் இடம் எது! நாம்
சேராத இடம் எது இவ்வுலகில்!
இனம் இனத்தைச் சேரும் என்றும்
குணம் குணத்தைச் சேரும் என்பார்
மனிதத்தின் நேசன் சேரும் இடமெது!
மனிதநேயம் வாழும் இடம் அன்றோ!
தீராத ஆற்றாமைத் தீயில் வேகும்
தேறாத மனித உள்ளங்கள் நாளும்
நூறாக வெள்ளை உள்ளத்தை உடைப்பார்
சாறாக நல்ல உள்ளத்தைப் பிழிவார்
சீராக இல்லா அழுக்கு உள்ளங்களே
சேராத இடம் என்று கொள்ளுங்களே!
கூறாக மக்களைக் கூடிப் பிரிவதுவும்
சேறாக மனிதத்தை ஆக்குவதும் வெறும்
நீறாகும் வாழ்வில் உறுதியாக நிலைத்திடாது
ஆறாகும் வாழ்வில் அரசு ஆளாது.
அனைத்திலும் மகாசக்தியால் எம் வண்ணமது
அணு அணுவாயளப்பது மறக்க வொண்ணாதது.
சேருமிடம் ஒருவன் சரியாகச் சேர்ந்திருந்தால்
வராத மக்கள் தொகையிறுதி அஞ்சலிக்கு
பாராத மக்கள் தொகை கூடிடுமா!
சேராத இடம் ஒருவன் சேர்ந்திருந்தால்
ஆராதிப்பாரோ ஒருவரை இறுதி அஞ்சலியில்!
நேரதே பூவுலகில் இந்நிலை ஒருவனுக்கு!
நீதியை மதிக்கும் வாழ்வு பாதிப்பாகாது
போதிமரம் தேவையற்ற பாதை இது!
5-10-2002
(இலண்டன் ரைம் வானொலி ரிஆர்ரி கவிதை நேரத்தில் வாசிக்கப்பட்டது.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக