வியாழன், 15 ஆகஸ்ட், 2019

165. (738) ஈரமில்லா நெஞ்சங்கள்







 ஈரமில்லா நெஞ்சங்கள்

ஈகையற்ற ஈரமில்லா நெஞ்சங்கள்
ஈடுபாடற்ற வெறுமை நெஞ்சங்கள்.
ஈங்கு பல மக்கள்
ஈன்றோரை இலட்சியம் செய்து
ஈட்டியாக மனதை வேதனைப்படுத்தி
ஈப்பிணியாகி முதியோரில்லம் அனுப்புகிறார்.

இறுகிய நெஞ்சங்கள் என்றும்
மறுகுதலான மறுதலிக்கும் நெஞ்சங்கள்.
அறுகம் புல்லாக அன்பிணைந்தால்
அறுதலின்று பாசத்தால் ஈரமாகலாம்
அறுவடையாகாத இன்பம் பெருக்கலாம்.
அறுதி வரை ஆனந்தமே.

அன்பெனும் ஈரமற்ற நெஞ்சங்களால்
துன்புறும் பிஞ்சுப் பாலகரும்
வன்முறைப் பாலியல் கொடுமைகளும்
இன்னம் பிச்சை எடுப்போரும்
இன்னலடையும் பெண்மையும், தெருவில்
அன்னியராய் வாழ்வோருமாய் பலர்.

சாரமுடை வாழ்வை ஆதரவெனும்
சாரலில் உலகை நந்தவனமாக்கலாம்.
பாரமுடை ஏக்கம் தவிர்த்து
தீரமுடன் சலனமற்ற வாழ்வமைத்து
ஆரத்தழுவி தன்னம்பிக்கை ஊன்றுகோலுடன்
பூரணமாக இவ்வுலகில் வாழலாம்.

16-11.2017





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு