செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

155. . (728 ) பிறப்பில் ஊனம் நான்.....







பிறப்பில் ஊனம் நான்.....

பிறப்பில் ஊனம் நான்
பெற்றவர் கல்லறையில்,!...தனிமையில்
இங்கே!...அழுவதற்கல்ல மனிதம்!
பொங்கும் உற்சாகம் கரைபுரட்டு!
வங்கக் கடலாக நுரையெழுப்பு!

பட்டுவிட்ட அங்கம் தவிர
கட்டமைப்பாய் மறு அங்கங்கள்!
கட்டு உன்னுயர் நம்பிக்கையை!
வட்டமிடக் கண்கள் உண்டன்றோ!
எட்டு ஆனந்த முனையை!

கேட்டிடு இசை வழியவழிய!
பாட்டுப் பாடு முடிந்தால்!
கேட்பவர் இனிக்கப் பாடலாம்!
பட்டுத் திறமைகள் எல்லோரிடமும்!
கிட்டும் வல்லமையை வசியமாக்கு!

சோதிடம் கற்றால் ஆர்வமிருந்தால்
சோதிடம் கூறலாம் பிறருக்கு!
தீதை விலக்கியே வாழ்ந்திடு!
ஓதிடு நல்லதை பிறரிற்கு!
கோதிடு அன்பால் அடுத்தரை!

உன் திறமையை அடையாளமாக்கி
உயர்த்திடு! ஊனத்தை அல்ல!
சொந்தக் காலில் நின்றிடு!
முடியாததை மீண்டும்  செய்ய 
முடியுமென்று முயற்சி செய்!

வாழ எத்தனையோ வழிகளுண்டு!
வாழ வழியில்லையென்று மொழியாது
வாகை சூட, நம்பிக்கை
வானம் தொட முயலலாம்!
வாசம் வீச வாட்டமழி!

கலையாக்கம் கைவேலை நன்று.
ஓலைப் பாம்பு தெரியுமா!
ஒரு காத்தாடி செய்து
ஓரமாயிருந்து சிறுவருக்கு விற்கலாம்!
பங்கமற்ற மனமுண்டுன்னிடம் அங்கவீனமானாலும்!

தனிமையில் பிறந்தோம் எவரும்
தனிமையாய் போவோம் பழகிடு!
இறைவனே பழக்குகிறான் இதையெமக்கு
சொல்லத் தேவையில்லை இதை 
'' உறவுகளும் என்னை ஒதுக்கியது ஏன்! ''

5-8-2016





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு